ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 08:12 AM
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருவள்ளுவர் சித்தாந்த சைவர்
(கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்)
திருவாவடுதுறை ஆதீனம்
முதற்பதிப்பின் பதிப்புரை:
சமய உண்மைகள் அறிவு அளவாக ஆராயும் போது அறிவு நிலையாகும்; உணர்வு அளவாக நுகரும் போது உணர்வு நிலையாகும்.
திருவள்ளுவர் அருளிச் செய்த நூல் திருக்குறள்; திருவள்ளுவரைப் பற்றி ஆராய்வதற்கு இந்த நூல் ஒன்று தான் சான்றாய் உள்ளது. இருந்தாலும், இது, வலிய அகச்சான்றாய் உதவும்.
அறிவு ஆராய்ச்சியால் திருக்குறளைச் சிந்தித்து 'திருவள்ளுவர் சமயம் எது' என்பதை வடநூற் புலமையோடு சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், மெய்கண்ட சாத்திரங்களிலும் நிரம்பிய புலமையுடைய கொரடாச்சேரி திருமடத்தின் தலைவர், சிவத்திரு வாலையானந்த அடிகளார் இந்நூலில் முடிவு செய்திருக்கிறார்கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் அறிவு நிலையே உதவுமாதலால், திருக்குறளிற் சிந்தனை இன்றியமையாததாயிற்று.
'திருக்குறள்' ஒருமறை நூல்; சமய நிலைக்கு அணுக்கமானது; பொதுமறையாய், மக்கள் வேதமாய், உலகுக்கெல்லாம் தனிச்சிறப்பான ஒன்றாய், அது விளங்குகிறது. அதன் ஆசிரியர் திருவள்ளுவர், தம் வாழ்க்கைத் திளைப்புக்கு ஏதேனும் ஒரு சமயத்தின் வழியே நின்றிருக்கவேண்டும்; ஒரு நெறியையும் பின்பற்றாமல் உலகப் பெரியோர் யாரும் இரார்.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 09:45 AM
சமய நெறிகளில், 'சைவ சமயம்' என்பது, மற்ற எல்லாச் சமயங்களின் உண்மைகளையும் தன்னுட் கொண்டிருக்கிறது; அல்லாமலும், மற்றச் சமயங்களில் வராத உண்மைகளையும் சைவ சமயம் பெற்றிருக்கிறது. இப்படி இது நிறைவான சமயமாயிருக்கிறது. மேலும், உலகு முழுவதும் கடைப்பிடிக்கும்படி, பொது நெறியாகவும் சைவ சமயம் விளங்குகிறது; இந்தியச் சமயங்களேயன்றி உலகச் சமயங்கள் அனைத்தும் இச்சைவ சமயத்தில் அடங்கி விடுகின்றன. இவ்வாறு சிறந்த இச்சிவ நெறிக்குச் 'சித்தாந்த சைவம்' என்பதும் ஒரு பெயர்; 'சித்தாந்தம்' என்றே சொல்வதும் உண்டு.
சிவநெறியாளர் இங்ஙனம் உலகப் பொது நிலையாளர் ஆகின்றனர்; அவர்கள் சிவநெறியும் உலகப் பொது நிலையில் திகழ்கிறது. இச்சிறப்புகட்குரிய காரணங்களும், திருவள்ளுவர் சிவநெறியைச் சேர்ந்தவர் என்பதற்கான குறிப்புக்களும், இச்சிறு நூலில் விளக்கமாக வருகின்றன.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சைவ எல்லப்ப நாவலர் தாம் இயற்றியருளிய திருவருணைக் கலம்பகத்தில்,
சைவத்தின் மேற்சமயம் வேறில்லையதிற் சார்சிவமாம்
தெய்வத்தின் மேற் றெய்வமில்
என்ற கட்டளைக் கலித்துறைப் பாலில் குறிப்பிட்டுள்ள கருத்து இந்நூலுக்கு அரண் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 11:27 AM
'சித்தாந்த நூல்கள்' எழுந்த காலத்திலும் முன்னும், மக்கள் பலவகையாக, உலகத்தைத் தத்தம் அறிவால் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். கடவுளைப் பற்றியும் உயிரைப் பற்றியும் மலங்களைப் பற்றியும் ஒவ்வொரு வகையாக முடிவு செய்திருக்கின்றனர். உலகாயதர், புத்தர், சமணர், மாயாவாதியர், பாஞ்சராத்திரிகள், ஐக்கியவாதிகள், பாடாணவாதிகள் முதலிய பல சமயத்தாராக அவர்கள் விளங்கினர். அக்காலத்தில் இருந்த பெரியவர்கள், எல்லாச் சமயங்களையும், 'புறம்புறம்', 'புறம்', 'அகப்புறம்', 'அகம்' என்று நான்கு வகையாகப் பாகுபாடு செய்து 24 பிரிவுகளில் அடக்கினர்; 'கிறித்துவம்', 'மகமதியம்' முதலிய பிற்காலச் சமயங்களும் இவற்றில் அடங்கிவிடும். இந்த 24 சமயங்களுக்கு வேறாக எந்தச் சமயக் கொள்கைகளும் உலகத்தில் இல்லை, முன்னும் இல்லை; பின்னும் இல்லை; 'சித்தாந்த சைவம்' ஒன்றே, இந்த 24 சமயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்த் தனி நெறியாய்த் திகழ்கிறது!
சமய நெறிகள், கொள்கையும் (தத்துவம்) ஒழுக்கமும் (ஆசாரம்) எனப் பொதுவாக இருவகைப்படும்.
'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' என்னும் இந் நூலில் 24 சமயக் கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் எடுத்து, முறையே திருக்குறள் மறுப்பதையும், அவையெல்லாவற்றிற்கும் மேற்பட்ட உண்மைகளைத் தன்னுட் கொண்டு விளக்குவதையும், நூலாசிரியர், காரண காரியங்களுடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். நடுநிலையோடு அனைவரும் கருதிப் பார்க்கலாம்; உண்மை விளங்குவது கட்டாயமானது; 'பொது உண்மைகளைச் சொல்லுகிறவர்கள், தம் வாழ்க்கையில் ஒரு சமயத்தையும் சார்ந்திரார்' என்று தக்கோர் யாரும் கொள்ளார்.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 11:35 AM
கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் 1926-27 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி நான்காஞ் சிலம்பில் இந்த நூலினை மூன்று இதழ்களில் எழுதியுள்ளார்கள். இந்நூற் கருத்துக்களை இக்கால மக்களும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் வேண்டுகோளுக்கிணங்கித் தனி நூலாக இதனை வெளியிட்டிருக்கிறோம்.
தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் மறைமலையடிகளின் மாணவரும் ஆகிய தவத்திரு அழகரடிகள் அவர்களிடம் இந்நூலினை வெளியிடும் கருத்துப் பற்றி யாங்கள் தெரிவித்தபோது, இப்பணி சாலச்சிறந்ததென்றும், இன்றியமையாத நுண்கருத்துகள் இந்நூலின்கண் உள்ளனவென்றும், தமிழ் மக்கள் உண்மையுணர்தற்கு இந்நூல் வழியாகுமென்றும் எடுத்துக் கூறி, இதனை வெளியிடுதற்கு ஏற்பச் செவ்விதாக்கித் தந்தனர். அவர்களுக்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியதாகும்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் 'திருவள்ளுவர் கோட்டம்' அழகாகவும் மேம்பாடாகவும் தோன்றித் திருக்குறளை மேன்மேலும் ஆராய்ந்து வருகிறது; திருக்குறள் இன்ன கோட்பாட்டுக்கு உரியது, என்பதைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆராய்ச்சியாளர்க்கு எடுத்துக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. 'திருவள்ளுவர் சித்தாந்த சைவரே' என்று, ஆராய்ச்சிக்கு விருந்தாக நடுநிலையாளரை நோக்கி, இந்நூல் ஆக்கப்பட்டிருப்பதனால், இதனை வெளியிட விரும்பினோம். ஆராய்வார்க்குப் பயன்படுதலோடு திருவள்ளுவரின் விளக்கத்துக்கும் இது சிறப்புத் தரும் என்று நம்புகிறோம்.
அறிஞர்களும், அன்பர்களும் இதனை வாங்கி ஆராய்வதுடன் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்படி கல்விச்சாலை இளைஞர்களுக்கும் உதவும்படி செய்ய வேண்டுகிறோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
1976
சத்தியா
Jun 5 2007, 11:43 AM
ம்ம்... நன்றி நாவலரே!
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 01:15 PM
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
பதிப்புரை
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ச் சச்சிதானந்தமாய் விளங்கும் பரசிவன், ஆன்மாக்கள் உய்ய வேத சிவாகமங்களை அருளிச் செய்தான். தெய்வக் கோட்பாடுகளை ஆராய முற்பட்டவர்கள் தத்தம் ஞான வரம்புக்கு ஏற்ப வேத சிவாகமங்களை ஒட்டியோ மறுத்தோ வெவ்வேறு முடிபுகளைக் கண்டு அவற்றைப் பரப்பி வந்தனர். இத்தகைய முடிவு வேறுபாடுகளால் சமயங்கள் பலவாயின.
சிவஞானம் முதிர்ந்த சான்றோர்கள் அச்சமயங்களை 24 ஆக வகைப்படுத்தினர். அவற்றுள்ளே சைவ சித்தாந்தப் பேருண்மையை வெளிப்படுத்தி மெய்கண்ட சாத்திரங்களையும் பண்டார சாத்திரங்களையும் அருளிச் செய்தனர்.
இந்நிலையில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பொது மறை என்றும், தத்தம் சமய நூல் என்றும் ஒரு சிலர் சான்று காட்டி எழுதியும் பேசியும் வந்தனர். பஞ்சாக்கரபுரம் ஸ்ரீவாலையானந்த சுவாமிகள், திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, அதனை இயற்றிய திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்ற முடிவுக்கு வந்து இதனை உலகறியச் செய்ய வேண்டும் என்று கருதி கட்டுரைகள் இயற்றினார்கள். திருவள்ளுவர் ஏனைய புறச் சமயத்தவரல்லர் என்பதை திருக்குறள் சான்றுகளால் நிறுவியும், திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்பதையும் திருக்குறள் சான்று கொண்டு வலியுறுத்தியும் அக்கட்டுரைகளை எழுதினார்கள். அந்த கட்டுரைகள் 1926-1927 ஆம் ஆண்டுகளில் செந்தமிழ்ச் செல்வி என்னும் பத்திரிகையில் மூன்று இதழ்களில் வெளிவந்தன. பின்னர் 1976ஆம் ஆண்டில் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் ஒரு நூலாக வெளியிடப்பெற்றது.
சந்தானசாரியாருள் முதலாமவரும், சிவஞான போதம் என்னும் சாத்திர நூலை அருளியவருமான அருள்திரு மெய்கண்ட தேவரின் குருபூசை விழா, அவரது அவதாரத் தலமாகிய பெண்ணாகடத்திலும், சிவானந்தப் பேறு பெற்ற திருவெண்ணெய் நல்லூரிலும் ஆண்டுதோறும் முக்தித் திருநாளாகிய ஐப்பசி - சுவாதி தினத்தன்று ஆதீனத்தால் அபிடேக ஆராதனை, நூல் வெளியீடு, சாத்திர சொற்பொழிவு நிகழ்வுகளுடனும் இரவு மெய்கண்டார் திருவீதியுலாவுடனும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 01:31 PM
திருவெண்ணெய்நல்லூரில் 1951 முதல் 1969 வரை 19 ஆண்டுகள் மெய்கண்டார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று சித்தாந்த சைவமாநாடுகளும் நூல் வெளியீடுகளும் நடைபெற்று வந்தன.
அருள்மிகு மெய்கண்டார் திருக்கோயிலில் சிவாசாரியார்களைக் கொண்டு ஆறுகால யாகபூஜைகளை செய்வித்து, 19.6.1994-ல் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் தமது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் சிறப்புடன் செய்தருளினார்கள்.
மெய்கண்டார் அருளிய சிவஞானபோத செம்பொருளை யாவரும் அறிந்து பயன்கொள்ளும்வண்ணம் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணைவழி திருவாவடுதுறை ஆதீனம் சைவசித்தாந்த நேர்முக பயிற்சி மையம் என்ற அமைப்பு 12 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது. இம்மையத்தின் மூலம் இதுவரை 5250 மாணவர்கள் பயிற்சி பெற்றும், தற்சமயம் 4280 மாணவர்கள் பயிற்சியிலும் உள்ளனர்.
சென்ற சில ஆண்டுகளில் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின்வண்ணம் இக்குருபூசை தினத்தன்று (1) Theology of Tamil (2) சிவஞானபோதம் (3) அஷ்டபிரகரணம் 5,6 (4) குண்டவிதி (5) திருக்குறள் பொது நூலா? முதலிய நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன.
இவ்வாண்டு குருபூசை விழாவில் (ஐப்பசி - சுவாதி) விசு ஆண்டு ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள் (14.11.2001) புதன்கிழமையன்று திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின்வண்ணம் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பெறுகிறது.
சைவ மெய்யன்பர்களின் இவ்வாதீன வெளியீடாகிய இந்நூலைப் பெற்றுப் பயின்று நலம் பெறுவாராக.
திருவாவடுதுறை ஆதினம்.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 01:35 PM
திருவள்ளுவர் சித்தாந்த சைவர்
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கடவுளால் உதவப்பட்ட உடல் கருவி உலக (தநு கரண புவன) போகங்களை அடைந்த ஆன்மாக்கள், தமது வினைக்கீடாகப் பல திறப்பட்ட அறிவு விளங்கப்பெறும் (பல அறிவு) பேதத்தால் உயிர்கள் நுகரும் இன்ப நிலைகளும் பல திறப்படும். அவ்வின்ப நிலைகளையடைந்து இன்ப நுகர்ச்சியுறுங் காலமே 'சமயம்' எனப்படும்.
சமயம் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்கு வகைப்படும்.
புறப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களையும், அவற்றின் விதி விலக்குகளையும் உடம்படாது, சிறிது கால இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.
புறச்சமயமாவது, சிவாகமங்களை உடம்படாது, வேதத்தை மட்டும் உடம்பட்டு, அதிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.
அகப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, அவற்றோடு ஓரோர் காலங்களில் மோகத்தினாற் சில உயிர்கள் செய்த 'தந்திர' கலைகளையும் உடம்பட்டு, அவற்றிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.
அகச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, இன்ப நுகர்ச்சி முறையில் பேதப்படும் இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.
ஆறுமுக நாவலர்
Jun 5 2007, 01:52 PM
புறப்புறச் சமயங்கள்:
உலோகாயதம், புத்த பேதங்கள் நான்கு, சமணம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.
உலோகாயதத்தின் உட்பிரிவுகள்:
உடலே உயிர் என்னும் (தேகான்ம) வாதம், பொறிகளே உயிர் என்னும் (இந்திரியான்ம) வாதம், மூச்சை உயிர் என்னும் (பிராணான்ம) வாதம் என்பன.
புத்த பேதங்கள் நான்காவன:
மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம் என்பன.
சமணத்தின் உட்பிரிவு:
நிகண்ட வாதமாம்.
புறச் சமயங்கள்:
தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம் பாஞ்சராத்திரம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.
தருக்கத்தின் உட்பிரிவுகள்:
வைசேடிகம், நையாயிகம் என்பன.
மீமாஞ்சையின் உட்பிரிவுகள்:
பட்டம், பிரபாகரம் என்பன.
ஏகான்ம வாதத்தின் உட்பிரிவுகள்:
மாயாவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் என்பன.
அகப்புறச் சமயங்கள்:
பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஐக்கவாத சைவம் என ஆறு.
அகச் சமயங்கள்:
பாடாணவாத சைவம், பேதவா சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுரவவிகாரவாத சைவம், சிவாத்துவிதவாத சைவம் என ஆறு.
இங்ஙனங் கூறிய சமய பேதங்களுள் நம் திருவள்ளுவ நாயனார் எச்சமயத்தைச் சார்ந்தவர் என ஆராய்வோம்
சத்தியா
Jun 5 2007, 03:07 PM
ம்... நன்றி நாவலரே!
siva
Jun 5 2007, 06:37 PM
நன்றி நாவலரே.
Thanimathy
Jun 6 2007, 02:41 AM
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
ஆறுமுக நாவலர்
Jun 6 2007, 09:13 AM
நன்றி நண்பர்களே!
ஆறுமுக நாவலர்
Jun 11 2007, 08:00 AM
(1) 'உலோகாயதர்' அல்லர்
(1) உலோகாயதர்கள் காட்சியளவை ஒன்றே கொள்வர்; கருதல் (அனுமானம்) உரை என்னும் அளவைகளை உடம்படார். நம் நாயனாரோ,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்றும்,
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338
என்றும்,
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. 1013
என்றும்,
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122
என்றுங் கூறுமாற்றால் காட்சியளவை, கருதல் அளவைகளையும்,
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. 610
என்று கூறுமாற்றால் அவர் உரையளவையையும் உடம்படுகின்றார்.
சத்தியா
Jun 11 2007, 04:55 PM
ம்... நன்றி நாவலரே!
Thanimathy
Jun 12 2007, 04:37 AM
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
ஆறுமுக நாவலர்
Jun 12 2007, 07:44 AM
(2) உலோகாயதர் காட்சியளவைக் கெய்துகின்ற நிலம், நீர், தீ, வளியெனும் நான்கு பூதங்களையே கொள்வர். நாயனார்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 271
என்று கூறுமாற்றால் ஐம்பூதங்கள் உண்டெனக் கொள்கின்றார்.
ஆகையால் நாயனார் 'உலோகாயதரல்லர்' என்பதொருதலை.
ஆறுமுக நாவலர்
Jun 12 2007, 07:45 AM
(அ) 'உடலே உயிர்' என்பர் அல்லர்
(1) உடலே உயிரென்பவர் உடலே ஆன்மா என்றும், உடலின் வேறாய் ஆன்மா இல்லை என்றுங் கூறுவர். நம் பொய்யில் புலவர்,
அவிசொரிந் தாயிரம் வேண்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
என்றும்,
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338
என்றும் கூறுமாற்றால் தேகத்தின் வேறாய் உயிருண்டென்பதை அவர் உடன்படுகின்றார்.
ஆறுமுக நாவலர்
Jun 12 2007, 08:38 AM
(2) உடலே உயிர் என்பவர்கள் தாயையும் தந்தையையுமே தெய்வமாகக் கொள்வர்
நாயனார் ஆதிசத்தியோடு கூடிய பகவனாகிய சிவபரம்பொருளைத் தெய்வமாகக் கொண்டு வாழ்த்துக் கூறினார். ஆகலின் நாயனார் உடலே உயிர் என்பவரல்லர். ஆதியாகிய தாயையும் பகவனாகிய தந்தையையும் கூறி வழிபட்டார் எனச் சிலர் கூறுவர். உலக முதலாவான் ஆதிபகவனென உவமையுடன் கூறியதனால், ஆதிபகவனென்ற சொற்கள் தாய் தந்தையை உணாத்தின் உவமையுடன் ஒருவாற்றானும் பொருந்தாது.
சீர்கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்
சோர்விலடை யாற்றெளிந்தோம் சோமேசா
என்ற முதுமொழி அகர முதல எழுத்தெல்லாம் என்ற ஒப்பினாலும், ஆதி யென்ற அடையினாலும் உலக முதற்பொருள் சிவபரம் பொருளேயென முதல் திருக்குறள் உணர்த்துகின்றது என கூறுகின்றது. 'பகவன்' என்ற சொல் மாயோன் முதலியோரையும் குறிக்குமாகலின், அவர்பாற் செல்லாது, சகத்துக்கு நிமித்த காரணனாகிய பதிப்பொருளை யுணர்த்தும் பொருட்டு, ஆதியென்ற அடை கொடுக்கப்பட்டது. அதனை மேலும் மேலும் வலியுறுத்தவே, "வாலறிவு" "வேண்டுதல் வேண்டாமை யின்மை" "தனக் குவமை யின்மை" "அறவாழி யந்தணனாந் தன்மை" "எண்குணமுடைமை" முதலிய தெய்வ குணங்களை விதந்தெடுத்து வகுத்துந் தொகுத்தும் ஓதப்பட்டது. ஆதலால், அவர் கூற்றுப் போலியென்றுணர்க.
சத்தியா
Jun 12 2007, 10:01 AM
ம்ம்... நன்றி நாவலரே!
ஆறுமுக நாவலர்
Jun 12 2007, 10:35 AM
(ஆ) 'பொறிகளே உயிர்' என்பவர் அல்லர்
பொறிகளே ஆன்மா என்போர், மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து பொறிகளை சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனும் ஐம்புலன்களை நுகர்தலால் அவ்வைம் பொறிகளே ஆன்மா என்பர். நம் பொய்யில் புலவர்,
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் 24
என்றும்,
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விகம் புளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி 25
என்றும்,
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு 27
என்றும் கூறுமாற்றால் ஐம்பொறிகளுக்கு வேறாக உயிருண்டென்பதை உடம்படுதலால், அவர் 'பொறிகளே' உயிர் என்பவர் அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 12 2007, 10:35 AM
(இ) 'மூச்சே உயிர்' என்பவர் அல்லர்
மூச்சே உயிர் என்போர். மூச்சு உடம்பில் நின்று இயங்குங்கால் உடம்பில், உணர்ச்சியிருந்தும், பிரித்த போது உணர்ச்சியில்லாமலும் இருக்கக் காண்பதனால் மூச்சே உயிர் என்பர். நம் செந்நாப்போதார் தமது தெய்வ நூலில்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. 107
என்றும்,
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள். 1315
என்றுங் கூறி, மறு பிறப்புக்கள் உண்டென்று நிறுவுவர்; அதனால், எடுத்த பிறப்பின்பாற்பட்ட ஐம்பூதங்களிலொன்றாகிய காற்றின் கூறான மூச்சை உயிரெனக் கொள்ளும் 'மூச்சான்மவாதி' அல்லர்.
Thanimathy
Jun 13 2007, 03:28 AM
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
ஆறுமுக நாவலர்
Jun 13 2007, 07:32 AM
நன்றி தனிமதி!
ஆறுமுக நாவலர்
Jun 13 2007, 07:34 AM
(2) 'பெளத்தர்' அல்லர்
பெளத்தர், ஞானத்தின் வேறாய்க் கடவுளின் றென்றும், ஞானமே ஆன்மாவென்றுங் கூறுவர்; அவர்கள் பதமுத்திகளுண்டெனக் கொள்வதில்லை. திருவள்ளுவ தேவர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
என்னுந் திருக்குறள்களால் ஞானத்தின் வேறாய்க் கடவுளுண்டென்றும்,
அறிதோறு அறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு. 1110
என்னுந் திருக்குறளால் ஞானத்தின் வேறாய் ஆன்மா வுண்டென்றும்,
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103
என்னுந் திருக்குறளால் பதமுத்தித் தானங்களாகிய மேலுலகங்களுண்டென்றும் கூறுவதனால், திருவள்ளுவ தேவர் 'பெளத்தர்' அல்லர்.
சத்தியா
Jun 13 2007, 11:43 AM
ம்... நன்றி நாவலரே!
ஆறுமுக நாவலர்
Jun 13 2007, 01:48 PM
(அ) 'மாத்தியமிகர் (சூனியவாதி)' அல்லர்
மாத்தியமிகர் உலகத்துப் பொருள்கள் அகப்பொருள் புறப்பொருள் என இருதிறப்படுமென்றும், அவ்விரு திறப்பொருள்களும் உள்ளவும், இல்லவும், உள்ளவுமில்லவும், இரண்டு மல்லவுமாகிய நான்குமில்லை யாகலான் சூனியமென்றும், மயக்கத்தால் உள்ளனபோல் தோன்றுகின்றன வென்றுங் கூறுவர். நாயனார் தமது வாயுறை வாழ்த்தில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்ற முதற்றிருக்குறளாலேயே உலகு உண்டென்றும், அதற்கு ஒரு முதல் உண்டென்றும் உடம்படுகின்றதனால் சூனியவாதியாகிய 'மாத்தியமிகர்' அல்லர்.
Thanimathy
Jun 13 2007, 04:18 PM
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
ஆறுமுக நாவலர்
Jun 20 2007, 11:24 AM
(ஆ) 'யோகாசாரர் (விஞ்ஞானவாதி)' அல்லர்
யோகாசாரர், அகப்பொருளாகிய ஞானம் உண்டென்றும், புறப்பொருள்கள் சூனியமென்றுங் கூறுவர். பொய்யில் புலவர்,
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 751
என்றும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 754
என்றும்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்றும் வருந் திருக்குறள்களால் புறப்பொருள்களுண்டெனக் கொள்வதனாலே, புறப்பொருள்களெல்லாம் சூனியம் என்கின்ற விஞ்ஞானவாதியாகிய 'யோகாசாரர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 20 2007, 11:24 AM
(இ) 'செளத்திராந்திகர்' அல்லர்
செளந்திராந்திகர் புறப்பொருள்கள் வழியளவையானறியப்படுமென்பர். மேலும், சாதிபேதம், உயிர்கள், அடிசேர் முத்தி முதலியன இவர்களுக்கு உடம்பாடில்லை. நம் செந்நாப் போதார்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்பதனாலும்,
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள. 1101
என்பதனாலும் வாயிற் காட்சியையும்,
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204
என்பதனால் மானதக் காட்சியையும்,
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினுங் காமம் இனிது 1201
என்பதனால் தன்வேதனைக் காட்சியையும் உடம்பட்டு இவ்வளவைகளினாலே புறப்பொருள்கள் காணப்படுகின்றனவென்றும்,
ஆறுமுக நாவலர்
Jun 20 2007, 11:25 AM
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. 321
என்றும்,
உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330
என்றுங் கூறுவதால் உயிருண்டென்றும்,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134
என்று கூறுவதால் சாதி உண்டென்றும்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
எனக் கூறுவதால் அடிசேர் முத்தி யுண்டென்றுங் கொள்கின்றார். ஆகையால் செந்நாப்போதார் 'செளத்திராந்திகர்' அல்லர்.
சத்தியா
Jun 20 2007, 11:46 AM
ம்ம்... நன்றி நாவலரே!
Thanimathy
Jun 21 2007, 07:29 AM
திருவள்ளுவர் சித்தாந்த சைவர், வாலையானந்த
பதிப்பு நன்றாகவுள்ளது...வள்ளுவரின் குறளுடன் அதன் பொருளும் தந்தால் இன்னும் அதிகூடிய விளக்கத்தைப்பெற வாய்ப்பாக அமைந்திருக்கும்..
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
[/QUOTE]
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:49 AM
நன்றி சத்தியா மற்றும் தனிமதி அவர்களே! எல்லாம் தருகிறேன்.
ஈ) 'வைபாடிகர்' அல்லர் வைபாடிகர் மஞ்சளும் சுண்ணாம்புங் கூடினவிடத்து ஒரு சிவப்பு நிறந் தோன்றுமாப்போல, காணப்பட்ட பொருள்களும் பொறிகளின் புலன்களாகிய அறிவும் கூடினபோது உலகப் பொருள்கள் பொருந்தித் தோன்றுவது ஞானக் காட்சியென்றும், அதைத் தெளிந்தவர்க்குப் புத்தர் வீடு தருவரென்றுங் கூறுவர், திருவள்ளுவர்.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து 24 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 28 என்றும் கூறுவதால் ஐம்பொறிகளையடக்கிப் புறப்பொருள்களை யுணராதிருப்பது ஞான காரணமென்றும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8 என்று கூறுவதால் இறைவனடி சேர்தலே முத்தியின்ப மென்றும் உடம்படுகின்றார்.
ஆகையால் திருவள்ளுவ தேவர்
'வைபாடிகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:50 AM
(3) 'ஆசீவகர்' அல்லர் (ஆசீவகம் - சமணம்)
'ஆசீவகர்' நிலவணு நீரணு தீயணு வளியணு ஆகிய நான்கணுக்களின் கூட்டுறவால், சீவ அணு வினைக்கீடான உடலை யெடுக்குமென்றும் இவ்வணுக்களுக்கு வேறாய்க் கடவுள் இல்லையென்றுங் கூறுவர். நம் பெரு நாவலர் தமது 'உத்தர வேதத்'தில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்று கூறுவதனால் உலகுக்குக் கருத்தாவாகிய ஆதிபகவனுண் டென்றும்,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377
என்று கூறுவதனால் கன்ம பலன்களைச் சீவர்களுக்குக் கடவுளே கொடுப்பனென்றும் உடம்படுகின்றார்.
ஆகையால் நம் தேவர், 'ஆசீவகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:51 AM
(அ) 'நிகண்டவாதி' அல்லர்
கண்டம் - உடை. நிகண்டம் - உடையின்மை. நிகண்டவாதிகளுக்கு உடையில்லை. இவர்கள் முக்குணங்கள் கெடுவதே முத்தியென்பர். நம் தேவர்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788
என்ற திருக்குறளால் உடை உண்டென்றும்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
என்ற திருக்குறளால் இறைவனடி சேரும் முத்தி யுண்டென்றுங் கூறுகின்றனர்.
ஆகையால் தேவர் 'நிகண்டவாதி' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:52 AM
4) 'தார்க்கிகர்' அல்லர்
'தார்க்கிகர்' நுண்ணணுக் (பரமாணு) காரண வாதங் கூறுவர், நாயனார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்ற திருக்குறளால் உலகுக்குப் பகவன் காரணம் என்று கூறுகின்றார்.
ஆகையால் நாயனார், 'தார்க்கிகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:53 AM
(அ) 'வைசேடிகர்' அல்லர்
வைசேடிகர் - திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை எனும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொது வியல்பு வேற்றியல்புகளை யுணர்தலால், உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நானென்று எண்ணிய பொய்யுணர்வு கழியும். அது கழியவே முயற்சியின்மையின் நல்வினை தீவினைகளில்லையாய்ப் பிறவி ஒழியும். அங்ஙனம் ஒழியவே வரக் கடவனவாகிய துன்பங்களின்மையின் உடம்பு முகந்து கொண்ட வினைப்பயன், நுகர்ச்சியாற் ககிவுழி, இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற் கேதுவின்மையின் அறிவின்றிப் (பாடாணம்) கல்போற் கிடப்பதே முத்தியென்பர். நம் மாதானுபங்கியார் தமது பொதுமறையில்.
தாம்வீழ்வார் மென்றோன் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103
என்ற திருக்குறளில் பதமுத்தியையும்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
என்ற திருக்குறளில் முடிந்த முத்தியையுங் கூறுவதால் மாதானு பங்கியார் 'வைசேடிகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:53 AM
(ஆ) 'நையாயிகர்' அல்லர்
'நையாயிகர்' முத்தியில் ஆனந்த முண்டென்று கூறினாலும் இறைவனடி சேரும் முத்தியை உடம்படார். நாயனார்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார். 10
என்ற திருக்குறளால் அடிசேர் முத்தியை உடம்படுதலால் அவர் 'நையாயிகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 10:55 AM
(5) 'மீமாஞ்சகர்' அல்லர்
மீமாஞ்சகர் வேதத்தின் ஞான காண்டத்தை யிகழ்ந்து கரும காண்டத்தையே கொள்வர். ஆன்மாக்கள் பலவாய், நிலையாய், பரவலாய் (வியாபகமாய்), தொன்மையே (அநாதியே) காமம் சினம் முதலிய (காமக்குரோதாதிகளாகிய) பாசத்தை யுடையவைகளாய், வினைக்கீடாகப் பிறந்திறந்து, வினைகளைச் செய்து வினைப் பயன்களை நுகர்ந்து வரும். இவ்வான்மாக்களுக்கு வேறாய்க் கடவுள் (பரமான்மா) ஒருவன் உண்டென்பதும், உலகம் தோன்றியழியு மென்பதும் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பர். நம் நான்முகனார்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341
வேண்டினஉண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல. 342
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 12:06 PM
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து 344
என்னுந் திருக்குறள்களில் ஞான காரணமாகிய துறவு, ஐம்பொறியடக்கல் முதலியவைகளைக் கூறுதலானும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350
என்னுந் திருக்குறளில் ஆன்மாக்களுக்கு வேறாய் முதல்வனுண்டென்றும்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்னுந் திருக்குறளில் உலகுக்கு முதல்வராய் அதனை ஆக்கி நிறுத்தி அழித்து வருபவராய் ஒரு கடவுளுண்டென்றும் கூறுதலானும் திருவள்ளுவ நாயனார் 'மீமாஞ்சகர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 12:16 PM
(அ) 'பட்டர்' அல்லர்
பட்டர் கன்மமானது தானே பயன்கொடுக்குமென்று கூறுவர். தேவர்,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
என்ற திருக்குறளில் கன்மபலனைக் கொடுப்பவன் கடவுளென்று கூறுவதால் அவர் 'பட்டர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jun 21 2007, 12:17 PM
(ஆ) 'பிரபாகரர்' அல்லர்
பிரபாகரர் கன்மநாசத்தில் 'அபூர்வம்' என ஒன்று தோன்றி நின்று பயன் கொடுக்குமென்றும், 'பாடாணம்' போற் கிடப்பதே முத்தியென்றுங் கூறுவர். நம் முதற் பாவலர்,
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
என்னுந் திருக்குறள்களில் கன்ம பலனைக் கொடுப்பவன் முதல்வனென்றும், முதல்வன் திருவடியைச் சார்ந்தின்புற்று எக்காலும் வாழ்வதே முத்தியென்றும் கூறுதலால், அவர் 'பிரபாகரர்' அல்லர்.
Thanimathy
Jun 21 2007, 12:53 PM
நன்றி நாவலர் அவர்களே
ஆறுமுக நாவலர்
Jun 24 2007, 01:10 PM
(6) 'ஏகான்மவாதி' அல்லர்
ஏகான்மவாதியர் உண்மை அறிவின்ப வடிவமான கடவுள் (சச்சிதானந்த ரூபமான பரப்பிரமம்) ஒன்றே உள்ளது. அதற்கு வேறான உயிர்கள், உலகம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் கானல்நீர் போற் காணப்படுவனவேயன்றி உண்மையில் இல்லையென்பர்; வேதத்தின் கருமகாண்டத்தை இவர்கள் இகழ்வர்.
நாயனார் முதல் திருக்குறளில் உலகும், உலக முதற் பொருளும் உண்டெனக் கொள்வதனாலும்,
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22
என்ற திருக்குறளில் பல உயிர்கள் உண்டெனக் கொள்வதனாலும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259என்ற திருக்குறளில் வேள்வி முதலிய (யாகாதி) கருமங்களுண்டெனக் கொள்வதனாலும் 'ஏகான்மவாதி' அல்லர்.
Thanimathy
Jun 24 2007, 02:12 PM
மிக்க நன்றி நாவலர் அவர்களே..
சத்தியா
Jun 24 2007, 04:54 PM
ம்ம்... நன்றி நாவலரே!
ஆறுமுக நாவலர்
Jul 4 2007, 05:44 AM
(அ) 'மாயாவாதி' அல்லர்
மாயாவாதிகள் 'அத்தியாசவாதம்' கூறுவர்; கடவுளுக்கு வேறாக உயிர்கள் இல்லையென்பர். உலகம் உயிர் இறை ஆராய்ச்சியில் (ஜெகஜீவ பரத்துவ விசாரத்தில்) தோன்றும் வேதாந்த ஞானத்தால் கடவுளுருவம் (பிரமரூபம்) யானென அறிவதே முத்தியென்பர். நம் தேவர்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
என்பது முதலிய திருக்குறள்களால் உள்ளதே செயலாதல் (சற்காரிய வாதங்) கூறுகின்றார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை 322
என்பது முதலிய திருக்குறள்களால் கடவுளுக்கு (பரமான்மாவுக்கு) வேறாக உயிர்களே (சீவான்மாக்கள்) உண்டென்கின்றார்;
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார். 10
என்ற திருக்குறளால் இறைவனடி சேர்கின்ற முத்தியைக் கூறுகின்றார்.
ஆகையால் தேவர் 'மாயாவாதி' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jul 4 2007, 05:45 AM
(அ) 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்
'நிரீச்சுரசாங்கியர்' முக்குணங்களும் அடங்குவதே முத்தியென்பர். செந்நாப்போதார்,
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
என்பது முதலிய திருக்குறள்களால் இறைவனடியைச் சேர்வதே முத்தி யென்கின்றார்.
ஆகையால் அவர் 'நிரீச்சுரசாங்கியர்' அல்லர்.
ஆறுமுக நாவலர்
Jul 4 2007, 05:46 AM
(ஆ) 'பாற்கரியவாதி' அல்லர்
'பாற்கரியவாதிகள்' உண்மையறிவின்ப வடிவமான கடவுளே (சச்சிதானந்த ரூபமான பிரமமே). அறியாமைப் பொருளும் (சடமும்), அறிவுப் பொருளுமாய் (சித்துமாகிய) உலகங்களாய்த் திரிந்தது (பரிணமித்தது), அங்ஙனம் திரிந்து வேறுபட்டு (பரிணமித்து விகாரப்பட்டு) அறியாமையினாற் கட்டப்பட்டது (பந்தமாயிற்று); அருளுருவத்தில் (பரமார்த்தத்தில்) ஒரு பொருளே உள்ளது. வேதாந்த ஞானத்தால் கடவுள் (பரப்பிரமம்) விளங்கும். அதில் ஈடுபடும் இலயித்தலாகிய உயிர் கெடுகின்ற முத்தியே முத்தியென்பர். முதற் பாவலர்,
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். 1062
என்ற திருக்குறளால் முதல்வன் தானே உலகாகாமல் உலகை இயற்றினானென்றும்,
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
என்ற திருக்குறளால் முதல்வனடியைச் சேர்ந்து நீடுவாழ்வதே 'முத்தி' என்றுங் கூறுகின்றார்.
ஆகையால் நாயனார் 'பாற்கரியவாதி' அல்லர்.